உடலுக்கு ஊட்டமளிக்கும் வேர்க்கடலையை சுவையான பேபிகார்னுடன் காரக்குழம்பு வச்சுதான் பாருங்களேன்....
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 10
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
புளி - எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் - 2
சாம்பார்பொடி - 2 டீ ஸ்பூன் (காரத்திற்கேற்ப)
நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
அரிசி ஊறிய நீர் - 1 கப் (குழம்புக்கு தேவையான அளவு)
தேங்காய்ப்பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை
பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் பவுடரை அரை கப்
வெந்நீரில் கரைத்துக் கொள்ளவும் அல்லது தேங்காய் துருவல் இருந்தால்
அதிலிருந்து கெட்டியான பால் அரை கப் எடுத்துக் கொள்ளவும். தக்காளியுடன்
சாம்பார் தூளை சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். புளியை அரிசி ஊற வைத்த
நீரில் போட்டு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பேபி கார்னை பொடியாக
நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,
கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்
பின் ஒன்றாக போட்டு வதக்கவும். பிறகு வேர்க்கடலை மற்றும் நறுக்கின பேபி
கார்ன் துண்டுகளை சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் அரைத்து வைத்திருக்கும்
தக்காளி விழுதினை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். எல்லாவற்றையும்
சேர்த்து வதக்கிய பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க
விடவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கும் போது தேங்காய்ப்பாலை
ஊற்றி கிளறி விடவும். ஒரு கொதி கொதித்ததும் நறுக்கின கொத்தமல்லித்தழை தூவி
இறக்கி விடவும். சுவையான பேபிகார்ன் வேர்க்கடலை காரக்குழம்பு ரெடி.