தேவையான பொருட்கள்:
நானுக்கு:
மைதா - 2 கப்
பால் - 1/2 கப்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஸ்டஃப்பிங் செய்ய:
பனீர் துருவியது - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இளஞ்சூடுள்ள பாலில் சர்க்கரை, ஈஸ்ட் கலந்து பத்து நிமிடங்கள் மூடிவையுங்கள். பின்னர் தயிர் கலந்து, பத்து நிமிடங்கள் மூடி வையுங்கள். இதை மாவுடன் கலந்து, உப்பு, நெய் சேர்த்து, சற்று இளக்கமாகப் பிசைந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வையுங்கள். இரண்டு, மூன்று மணி நேரம் கழித்துப் பார்த்தால், மாவு இரண்டு மடங்காகி இருக்கும். துருவிய பனீருடன் வெங்காயம் சேருங்கள். பின், மற்ற பொருள்களையும் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, பூரணத்தை உள்ளே வையுங்கள். நன்கு மூடி (ஸ்டஃப் செய்திருக்கும் பூரணம் வெளியே வந்துவிடாதபடி) சற்று கனமாகத் திரட்டுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, திரட்டியதை அதில் போட்டு, நடுத்தரத் தீயில் நன்கு வேகுமாறு இருபுறமும் திருப்பிவிட்டு எடுத்து, வெண்ணெய் தடவிப் பரிமாறுங்கள்.