பெரும்பாலான வீடுகளில் சிக்கன் பிரியாணியை செய்தாலும், பலருக்கு
மட்டன் பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். ஏனெனில் மட்டன் கொண்டு பிரியாணி
செய்தால், அது மிகவும் சுவையுடனும், மணமாகவும் இருக்கும். இங்கு ஒரு
அருமையான மட்டன் பிரியாணி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த
ரெசிபி சற்று கஷ்டமாக இருப்பது போல் இருந்தாலும், மிகவும் சுவையாக
இருக்கும்
மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த மட்டன்
பிரியாணியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
Special Mutton Biryani
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/4 கப்
புதினா - 1/2 கப்
தண்ணீர் - 2 கப் + 1 கப் மட்டனை வேக வைக்க
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலாவிற்கு...
கிராம்பு - 2
பட்டை - 1/4 இன்ச்
ஏலக்காய் - 1
சீரகம் - 1/4 டீஸ்பூன்
ஜாதிபத்ரி - 1 சிறியது
அன்னாசிப்பூ - 1
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
பிரியாணி இலை - 2
ஊற வைப்பதற்கு...
மட்டன் - 1/4 கிலோ
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 5
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரியாணி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து
இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மட்டனை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் ஊற
வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
அதே சமயம் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின்
வெங்காயம், சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கிவிட்டு,
கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் மல்லி
தூள், மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக
வதக்கி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
பின் குக்கரில் உள்ள விசிலானது போனதும், அதனை மீண்டும் அடுப்பில் வைத்து,
அதில் பிரியாணி மசாலா பொடி சேர்த்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை கிளறி
விட வேண்டும்.
அதற்குள் அரிசியை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
நீரானது வற்றியதும், அதில் கழுவி வைத்துள்ள அரிசி, கேசரி பவுடர், உப்பு
சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 1
விசில் விட்டு, தீயை குறைத்து 6-8 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால்,
விசில் போனதும் திறந்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால், சுவையான மட்டன்
பிரியாணி ரெடி!!!